Mar 02, 2026

பகல் நேரத்தில் அதிகமாக தூங்கும் பழக்கம் மற்றும் சோர்வாக உள்ள நபர்களுக்கு டிமென்ஷியா மறதி நோய்க்கான வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அவசரமான இந்த உலகில் வேலைப் பளு, கல்வி, அதீத கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். தூக்கமின்மையால் கோபம், எரிச்சல் மற்றும் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பகல் நேரத்தில் அதிகமாக தூங்குபவர்கள் மற்றும் உற்சாகமே இல்லாமல் சோர்ந்து காணப்படுபவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் உலக அளவில் 5.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வசிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 சதவீதம் பேர் அல்சைமர் எனும் பொதுவான மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனராம். உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களில் இந்த டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோயால் பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதும், அவர்களின் ஆயுள் காலம் இதனால் குறைவதும் தெரியவந்துள்ளது.
இளமைக் காலத்தில் தூக்கம் என்பதை இழப்பது முதுமையில் பல்வேறு பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு பகலில் அடிக்கடி தூக்கம் வருவது அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
முதியவர்களுக்கு ஏற்படும் மறதி குறித்து நியூயார்க்கில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான முடிவுகள் நியூராலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பகல் நேரங்களில் வயதானவர்களுக்கு மிகவும் அதிகமாக தூக்கம் வருவது போன்று இருந்தாலோ அல்லது எந்த வேலையையும் செய்ய தோன்றாமல் சோர்வாக காணப்படுவது டிமென்ஷியா மறதி நோய்க்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும், முதியவர்களில் பலருக்கு நியாபக சக்தி, அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 76 வயதுடைய 445 பேரிடம் சுமார் மூன்றாண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நியாபக சக்தி, தூக்கம், நடப்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பகல் நேரங்களில் தூங்குவது, சோர்ந்து காணப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு 35. 5 சதவீதம் டிமென்ஷியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆய்வில் 268 பேருக்கு நன்றாக தூங்கி எழுவதாகவும், 177 பேர் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது ஏற்கனவே 42 பேருக்கு நியாபக சக்தியில் பிரச்னை இருப்பதும், 36 பேருக்கு நியாப சக்தியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வாளர் விக்டோயர் லெராய் கூறுகையில், தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் மிக முக்கிய நோக்கம். தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள் கட்டாயம் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற வேண்டும். இதன் மூலம் அறிவுத் திறனில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம் என்றார்.
Tirupur Reporter
53/3 Sardha Nagar, 2nd Street,
Samundipuram,
Tirupur - 641603.
Copyright © 2025 Tirupur Reporter